கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு, சமூக வலைதளத்தின் வாயிலாக அறிமுகமான தீபா அவடகி (33) என்ற பெண், ஆசை வார்த்தைகளை கூறி அவரை ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்துள்ளார். அங்கு தொழிலதிபர் குளிக்கச் சென்ற நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட தீபா, அவர் வைத்திருந்த நகை, பணம் மற்றும் செல்போனைத் திருடிக்கொண்டு தப்பியோடினார். இதுமட்டுமன்றி, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த தொழிலதிபரை மிரட்டி மேலும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில், திலக்வாடி போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கினர். குற்றவாளியைப் பிடிக்கத் திட்டமிட்ட போலீசார், ஒரு நபரைத் தயார் செய்து தீபாவிடம் பேச வைத்தனர். போலீசாரின் விரிப்பில் சிக்கிய தீபா, மீண்டும் ஒரு ஹோட்டலுக்கு வந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டார். விசாரணையில் அவர் பாகல்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் என்பதும், ஆடம்பர வாழ்க்கைக்காக இந்தத் தொழிலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட தீபாவிடம் நடத்திய விசாரணையில், அவர் தனது காதலன் சிவானந்த் என்பவருடன் சேர்ந்து பல தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை இதே பாணியில் ஏமாற்றி வந்தது அம்பலமானது. இவர்கள் இருவரும் திட்டமிட்டு வசதி படைத்தவர்களைக் குறிவைத்துத் திருடுவதையும், அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் சொகுசாக வாழ்ந்து வந்ததையும் ஒப்புக்கொண்டனர். இவர்களிடமிருந்து 2 கார்கள் மற்றும் 11 செல்போன்கள் உள்ளிட்ட சுமார் 32.86 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தற்போது தீபா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது காதலன் சிவானந்த் தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகும் முன்பின் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனப் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
