இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், பெங்களூருவில் வெறும் 31 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க 2.5 மணி நேரம் ஆனதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் போக்குவரத்து நெரிசல், மோசமான சாலைகள் மற்றும் வாகன ஓட்டிகளின் ஒழுக்கமின்மை ஆகியவையே இந்த அவதிக்கு முதன்மைக் காரணம் என்று அவர் சாடியுள்ளார். இத்துணை பெரிய தொழில் அதிபருக்கே இந்த நிலைமை என்றதும், அவரது பதிவு இணையத்தில் படு வைரலாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இப்பதிவைக் கண்ட இணையவாசிகள் மற்றும் மென்பொருள் ஊழியர்கள் பலர், கிரிஸ் கோபாலகிருஷ்ணனின் கருத்தை ஆமோதித்ததோடு நில்லாமல், இதற்கு தீர்வாக இன்ஃபோசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் முழுமையாக ‘ஹைப்ரிட் பணி முறைக்கு’ மாற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். பெருநகரங்களில் நிலவும் இத்தகைய போக்குவரத்து நெரிசலுக்கு, நிறுவனங்கள் ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி ‘அலுவலகத்திலிருந்து பணிபுரிய’ வைப்பதே முக்கியக் காரணம் என்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பூங்கா நகரம், சிலிக்கான் சிட்டி எனப் புகழப்படும் பெங்களூரு, கடந்த தசாப்தத்தில் மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரம் என்ற அவப்பெயரையும் பெற்றுள்ளது. மத்திய, மாநில அரசுகள் மெட்ரோ ரயில் போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்தினாலும், அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கைக்கு அது ஈடுகொடுக்கவில்லை. உலக அளவில் அதிக நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு இரண்டாம் இடத்தில் உள்ளதாகத் தரவுகள் குறிப்பிடும் நிலையில், இதற்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஒரு நிரந்தர நீண்டகால தீர்வை காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
