இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, பலரும் மின்சாரத்தில் இயங்கும் இண்டக்ஷன் அடுப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பெண் ஒருவர் இண்டக்ஷன் அடுப்பில் ரொட்டி சுட்டுக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராதவிதமாக அந்த அடுப்பு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறுகிறது. அந்த நேரத்தில் அருகில் ஒரு குழந்தையும், வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபரும் இருந்ததால் அந்த இடமே போர்க்களமாக மாறியது.
View this post on Instagram
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை என்றாலும், அடுப்பின் மேலிருந்த கண்ணாடித் தட்டுகள் சுக்குநூறாக உடைந்து சிதறின. இதேபோல மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹேமா ஜாட் என்ற பெண்ணுக்கும் இண்டக்ஷன் அடுப்பு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. மலிவு விலையில் கிடைக்கும் தரம் குறைந்த இண்டக்ஷன் அடுப்புகளைப் பயன்படுத்துவதே இத்தகைய விபத்துக்களுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
தரமான பாதுகாப்பு சோதனைகள் இன்றி சந்தையில் விற்கப்படும் சில அடுப்புகள், அதிக வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டிருக்கவில்லை. எனவே, நுகர்வோர் இண்டக்ஷன் அடுப்புகளை வாங்கும் போது, குறைந்த விலைக்கு ஆசைப்படாமல் நம்பகமான பிராண்டுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு தரச் சான்றிதழ் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
