2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி ஐந்து தொகுதிகளைக் கோரியுள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி காலம் முதல் திமுகவுடன் நீண்டகாலத் தார்மீக உறவு கொண்டுள்ளதாகவும், கடந்த காலங்களில் 16 தொகுதிகள் வரை பெற்றுப் போட்டியிட்டுள்ள வரலாற்றைச் சுட்டிக்காட்டியும், இந்தத் தேர்தலில் குறைந்தபட்சம் ஐந்து இடங்களையாவது ஒதுக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
திமுகவுடனான தங்களின் கூட்டணி என்பது வெறும் தேர்தல் கால ஒப்பந்தம் மட்டுமல்ல, அது கொள்கை ரீதியானது என்று காதர் மொய்தீன் வலியுறுத்தியுள்ளார். திமுகவின் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், வரும் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பாக திருச்சி, சென்னை, கடலூர், நெல்லை, தஞ்சாவூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் களத்தில் நிலவும் சவால்கள் குறித்துப் பேசிய அவர், அதிமுக, பாஜக மற்றும் தவெக போன்ற கட்சிகள் இணைந்தாலும் தேர்தலைச் சந்திப்பது என்பது எப்போதும் ஒரு சவாலான காரியமே என்று கூறினார். அதே வேளையில், சீமான் தனித்துப் போட்டியிடுவதால் தமிழகத்தில் மும்முனைப் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ளார். இருப்பினும், மக்கள் தான் இறுதி முடிவெடுக்கும் எஜமானர்கள் என்றும், திராவிட மாடல் அரசின் சாதனைகளே அவர்களுக்கு மீண்டும் வெற்றியைத் தேடித் தரும் என்றும் அவர் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
