ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத் தொடர்ந்து, தற்போது குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த மற்றொரு சரக்குக் கப்பலை (Epaminondas) ஈரான் இராணுவம் சிறைபிடித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போர் நிறுத்தத்தைக் காலவரையறையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஈரான் மீதான கடல்சார் முற்றுகையை அமெரிக்கா தொடர்ந்து நீட்டித்து வருவதே இத்தகைய தாக்குதல்களுக்குக் காரணம் என ஈரான் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தால் இந்தியா பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதுடன், ஈரானியத் தூதரை நேரில் வரவழைத்துத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. சர்வதேச கடல் வழித்தடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், இந்தியக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் அதிகரித்து வரும் இத்தகைய பதற்றங்கள், உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தகப் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
