புதுச்சேரி திலகர் நகரைச் சேர்ந்த பியூடிஷனான ராஜமாதங்கி (25) என்பவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், கணவர் சரவணன் சென்னையில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வந்தார். இதற்கிடையே, ராஜமாதங்கிக்கு பள்ளிப் பருவத்தில் அறிமுகமான கோட்டகுப்பத்தைச் சேர்ந்த சுரேந்திரன் (29) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் இருந்து வந்ததை அறிந்த கணவர் சரவணன் மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால் சுரேந்திரனும் ராஜமாதங்கியும் சரவணனைச் சந்தித்து விவாகரத்து கோரியதால், மனமுடைந்த சரவணன் மனைவியைப் புதுச்சேரி வீட்டில் விட்டுவிட்டு சென்னை சென்றுவிட்டார். இதன் பின்னர் சுரேந்திரனுடன் ராஜமாதங்கி அடிக்கடி பழகி வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, சுரேந்திரன் தனது தொலைபேசி அழைப்பை எடுக்காததால் ஆத்திரமடைந்த ராஜமாதங்கி, கோட்டகுப்பத்தில் உள்ள அவது வீட்டிற்குச் சென்று தகராறு செய்து, அவரது தாயாரையும் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேந்திரன், வீட்டில் இருந்த நாயைக் கட்டும் பெல்ட்டால் ராஜமாதங்கியைச் சரமாரியாக அடித்துள்ளார். அப்போது வலி தாங்காமல் ஓடிய ராஜமாதங்கி, அருகில் இருந்த கால்வாயில் விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சுரேந்திரன் அவரைப் பைக்கில் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, தட்டாஞ்சாவடி அருகே விபத்து நடந்ததாக நாடகமாடி, கணவர் சரவணன் எனப் போலியாகக் கையெழுத்திட்டு முதலுதவி சிகிச்சை மட்டும் பெற்றுக்கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே ராஜமாதங்கி மயங்கி விழுந்ததால், அவரது தாயார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த 3 மாத கர்ப்பிணியான ராஜமாதங்கி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முதலில் போக்குவரத்து போலீசார் விபத்து என வழக்குப் பதிவு செய்தாலும், சிசிடிவி காட்சிகளில் விபத்துக்கான அறிகுறி இல்லாததால் சந்தேகம் அடைந்து சுரேந்திரனைப் பிடித்து விசாரித்தபோது, அடித்துக் கொலை செய்த உண்மை வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து தன்வந்திரி நகர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து சுரேந்திரனைச் சிறையில் அடைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தமிழகப் பகுதியான கோட்டகுப்பத்தில் நடந்ததால், வழக்கை அங்குள்ள காவல் நிலையத்திற்கு மாற்றப் புதுச்சேரி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
