மயிலாடுதுறை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மூன்று வயது ஆண் குழந்தையைத் தாயும் அவரது கள்ளக்காதலனும் அடித்துக் கொலை செய்துவிட்டு, பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக நாடகமாடிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் குழந்தையின் தாய் கவிப்பிரியா (25), அவரது கள்ளக்காதலன் அபினேஷ் (30) ஆகிய இருவரையும் செம்பனார்கோவில் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பெற்ற குழந்தையையே கள்ளக்காதலுக்காகத் தாயும் அவனது காதலனும் சேர்ந்து துடிதுடிக்கக் கொலை செய்த இந்த கோரச் சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி தாலுக்கா, ஆலவேலி கிராமத்தைச் சேர்ந்த கனிவண்ணன் என்பவரை கடந்த 2020-ஆம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்து கொண்ட கவிப்பிரியாவுக்கு 6 வயதிலும் மற்றும் 3 வயதிலும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு முன்பே கவிப்பிரியாவுக்கு நுண்கடன் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த அபினேஷ் என்பவருடன் பழக்கம் இருந்த நிலையில், அது திருமணத்திற்குப் பிறகும் கள்ளத்தொடர்பாக நீடித்துள்ளது. இந்த விவகாரம் கணவருக்குத் தெரியவந்து குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படவே, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கவிப்பிரியா தன் குழந்தைகளுடன் கணவரைப் பிரிந்து ஆக்கூர் பாரதி வீதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். அங்கு எவ்வித தடையும் இன்றி அபினேஷ் அடிக்கடி கவிப்பிரியாவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 25 அன்று, மூன்று வயது இளைய மகன் பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் பலத்த அடிபட்டதாகக் கூறி கவிப்பிரியா மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அக்குழந்தை, தீவிர சிகிச்சை பலனின்றி ஜூன் 29 அன்று பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தந்தை கனிவண்ணன் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அக்குடியிருப்புப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சம்பவம் நடந்த நேரத்தில் அபினேஷ் வீட்டிற்குள் சென்றதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் சிக்கின.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், கள்ளக்காதலர்கள் இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தனர். சம்பவத்தன்று கவிப்பிரியா கீழே தண்ணீர் எடுக்கச் சென்றபோது, வீட்டில் இருந்த 3 வயது குழந்தை தொடர்ந்து அழுது அடம் பிடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபினேஷ் குழந்தையைக் கொடூரமாகப் பிடித்துக் கீழே தள்ளியதில், சுவற்றில் தலை மோதி குழந்தைக்குத் தலையின் உட்பகுதியில் பலத்த உள்காயம் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் கவிப்பிரியா, தங்களின் கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிந்துவிடும் என்ற பயத்தில், அபினேஷுடன் சேர்ந்து பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், நீதிமன்ற உத்தரப்படி கவிப்பிரியாவை திருச்சி பெண்கள் சிறையிலும், அபினேஷைக் கடலூர் மத்திய சிறையிலும் அடைத்தனர்.
