சாதனைகள் செய்வதற்கு வயது என்றுமே தடையில்லை என்பதற்கு நம் கண்முன் இருக்கும் உதாரணம் இளையராஜா அவர்கள். 27 வயதில் தனக்கு இசைக் குறிப்புகள் எழுதக் கூட தெரியாத நிலையில் இருந்து இன்று இசையை எழுதும் ஒரு சில இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். தன்னுடைய 82 ஆவது வயதில் இப்போது முதல் சிம்ஃபொனியை அரங்கேற்றியுள்ளார்.
இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது. அதுதான் இளையராஜா தமிழ் சினிமாவுக்கு அளித்த மிகப்பெரிய பங்களிப்பு என சொல்லலாம்.

இந்நிலையில் இளையராஜா சமீபத்தில் அளித்த தன்னுடைய நேர்காணல் ஒன்றில் தான் ஏன் பள்ளிப்படிப்பை நிறுத்தேன் என்பது பற்றி பேசியுள்ளார்.அதில் “என்னுடைய ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர், நான் எட்டாவதுக்கு மேல் நடிக்க மாட்டேன் எனக் கூறிவிட்டார். ஆனால் நான் எப்படியாவது நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காக வேலை செய்து பணம் சம்பாதித்தேன். இதற்கிடையில் எங்க அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களுக்கு திருச்சியில் ஒரு கச்சேரி இருந்தது.
அப்போது ஹார்மோனியம் வாசிப்பவர் சண்டை போட்டு சென்றுவிட அம்மா என்னை அழைத்து செல்ல சொன்னார். அங்கே கச்சேரி தொடங்குவதற்கு முன்னால் நான் சில பாடல்களைப் பாடினேன். அந்த பாடல்களைக் கேட்டு அங்கிருந்த ஐம்பதாயிரம் பேரும் கைதட்டினார்கள்.அந்த தருணம் எனக்கு என்னவோ ஆகிவிட்டது. அதன் பிறகு பள்ளிக்கூடம் சென்று படிக்கவேண்டும் என்ற ஆசை என்னிடம் இருந்து போய்விட்டது. அப்படிதான் நான் படிப்பை விட்டேன்” எனக் கூறியுள்ளார்.
