![a 2 - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/a-2-3.jpg)
CINEMA
எத்தனையோ பாட்டுக்கு பல்லவி சொல்லிருக்கேன்… ஆனா நான் எழுதுன முதல் பாட்டு இதுதான் – இளையராஜா பகிர்ந்த தகவல்
தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார். அதன் பிறகு மிடாஸ் மன்னன் போல அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறின. அந்தளவுக்கு அவர் பாடல்கள் அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழர்களை மயக்கியது.
இளையராஜா இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் பாடல் ஆசிரியராகவும் 100க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும் மெட்டமைக்கும் போது அவரே பாடல்களுக்கான பல்லவியை சொல்லிவிடுவாராம். பாடல் ஆசிரியர்கள் அதை பின்னொட்டி பாடலை எழுதிக் கொள்வார்களாம்.
இப்படி பல பாடல்களுக்கு பல்லவியை சொன்ன இளையராஜா முதல் முதலாக முழு பாடலையும் எழுதியது இதயக்கோவில் திரைப்படத்தில் இடம்பெற்ற “இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்” என்ற பாடல்தான். அந்த பாடலை எழுதுவதற்காக பாடல் ஆசிரியர் வருவதற்குள் தானே மொத்தப் பாடலையும் எழுதி முடித்துவிட்டாராம்.
அந்த பாடலை எஸ் பி பி குரலில் பதிவு செய்த இளையராஜா, பின்னர் தன்னுடைய குரலிலும் பதிவு செய்தாராம். எஸ் பி பி பாடியது படத்தில் இடம்பெறும். ஆனால் இளையராஜா பாடியது ஆடியோ கேசட்களில் மட்டுமே இடம்பெறும். இந்த பாடலின் மிகப்பெரிய வெற்றியால் அதன் பிறகு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களுமே அவரை தங்கள் படத்தில் ஒரு பாடல் எழுதி பாட சொல்லி கேட்க ஆரம்பித்துவிட்டார்களாம்.