அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் கலந்துகொண்டு, தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அதிமுகவில் நிலவும் சலசலப்புகள் குறித்து தனது பாணியில் மிகக் காரசாரமாகவும் நகைச்சுவையாகவும் உரையாற்றினார். அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பிற கட்சிகளுக்குத் தாவும் நிர்வாகிகளையும், அதற்குத் துணை போகும் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்த அவர், கட்சிக்கு விசுவாசமாக இருப்பதன் அவசியத்தை தொண்டர்களுக்கு வலியுறுத்தினார்.
அதிமுகவின் முக்கிய தலைவர்களான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோர் நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக வெளியாகும் செய்திகளை அவர் முற்றிலுமாக மறுத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்சித் தாவ முயன்றபோது, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்த சட்டரீதியான நடவடிக்கைகளுக்குப் பயந்து, அவர்கள் அனைவரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டார். “மந்திரி பதவி கிடைக்கும் என்பதற்காக சிலர் ஓடுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் இணைந்து முதலமைச்சராவார் என்று கூறுவதெல்லாம் ‘கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பவனுக்கு அறிவு வேண்டாமா?’ என்ற பழமொழிக்கு ஒப்பானது” என்று வதந்திகளை அவர் விளாசினார்.
திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய தலைவர்களான நத்தம் விஸ்வநாதன் மற்றும் முன்னாள் மேயர் மருதராஜ் ஆகியோர் இந்த கூட்டத்திற்கு வராததை சுட்டிக்காட்டிய அவர், கட்சி காட்டிய வழியில் வளர்ந்தவர்கள் இப்போது தடம்மாறுவதை கடுமையாகச் சாடினார். மருதராஜின் மகன் தவெக அலுவலகத்திற்குச் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டதைச் சுட்டிக்காட்டி, “உங்கள் குடும்பம் வளர வேண்டும் என்றால் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்; குள்ளநரி வேலை செய்பவர்களை மக்களும் தெய்வமும் சும்மா விடாது” என்றார். மேலும், பதவிக்காகவும் பணத்திற்காகவும் கட்சியை காட்டிக் கொடுத்துவிட்டு வெளியேறியவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்றும், துரோகம் செய்த எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் தேர்தலில் நிற்க சட்டப்படி அனுமதிக்க மாட்டார்கள் என்றும் எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசின் மீதும், புதிதாக அரசியலுக்கு வந்துள்ள விஜய் மீதும் கடுமையான விமர்சனங்களை வைத்தார். பத்திரப்பதிவு அலுவலகம் முதல் அமைச்சர்கள் வரை தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகக் குற்றம் சாட்டிய அவர், டாஸ்மாக் பாட்டில் விலையை உயர்த்துவதற்குப் பின்னால் கோடிக்கணக்கில் லஞ்சப் பணம் கைமாறியுள்ளதாக ஊடகங்களில் வந்த செய்திகளைப் பகிர்ந்தார். லஞ்சம் வாங்க மாட்டோம் என்று பேசும் தவெக தலைவர் விஜய், இந்த ஊழல்களைத் தட்டிக்கேட்டு நிரூபிக்கத் தயாரா என்றும் கேள்வி எழுப்பினார். தேர்தல் நேரத்தில் விஜய் பேசும் ‘பணம் கொடுக்காத புரட்சி’ உண்மையானால், நாமும் மக்களிடம் காசு கொடுக்காமல் ஓட்டுக் கேட்போம், என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என சவால் விடுத்தார்.
இறுதியாக, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்து வரலாற்றுச் சம்பவங்களை நினைவுகூர்ந்த திண்டுக்கல் சீனிவாசன், அரசியல் சூழல்கள் எப்போதும் மாறக்கூடியவை என்றும், அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்றும் தொண்டர்களுக்கு தைரியம் ஊட்டினார். “தற்போது தடம்மாறிச் சென்ற விளக்கெண்ணெய்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. வரும் 30-ஆம் தேதி மாவட்டக் கூட்டங்கள் அனைத்தும் முடிந்த பின்பு, துரோகிகளுக்கு சவுக்கடி கொடுக்க எடப்பாடி பழனிசாமி சாட்டையை கையில் எடுப்பார்; அது எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் வீசிய துரோகத்தை ஒடுக்கும் சாட்டையாக இருக்கும்” என்று தனது உரையை அதிரடியாக முடித்தார்.
