தமிழகத்தில் பொங்கல் பண்டிகை உற்சாகமாகத் தொடங்க உள்ள நிலையில், பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு முக்கிய தகவலை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பகிர்ந்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் கொண்டாட்டங்கள் முடிவதற்குள் தமிழகப் பெண்களுக்கு ஒரு “இனிப்பான செய்தி” காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் சுமார் 1.37 கோடி பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கெனவே, மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்க அரசு திட்டமிடுவதாக பேசப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் கொடுத்த இந்த அப்டேட், மகளிர் உரிமைத்தொகை உயர்வை பற்றியதாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ஐ. பெரியசாமியின் துறையின் கீழ் மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் பல்வேறு கடன் திட்டங்கள் வருவதால், இந்த அறிவிப்பு மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்ததாக இருக்கலாம் அல்லது சுயஉதவி குழுக்களுக்கான புதிய சலுகைகள் குறித்ததாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஏற்கனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் பொங்கல் ரொக்கப் பரிசாக 3,000 ரூபாய் அறிவித்துள்ள நிலையில், அமைச்சரின் இந்த கூடுதல் தகவல் தமிழகப் பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், பொங்கல் பண்டிகைக்கான ஆவலையும் இரட்டிப்பாக்கியுள்ளது.
