ராஜஸ்தான் மாநிலம் டீக் (Deeg) மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், போதிய மருத்துவ வசதிகள் இல்லாததை வெளிச்சம் போட்டுக் காட்டும் நெஞ்சையள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வந்த ஒரு முதியவர், அங்கு நோயாளிக்கான சக்கர நாற்காலி (Wheelchair) அல்லது ஸ்ட்ரெச்சர் கிடைக்காததால் கடும் அவதிக்குள்ளானார். நீண்ட நேரம் காத்திருந்தும் எந்த உதவியும் கிடைக்காத நிலையில், அவர் எடுத்த முடிவு அனைவரையும் கலங்கச் செய்துள்ளது.
உதவிக்கு யாரும் வராததால், அந்த முதியவர் தனது மிதிவண்டியையே (Cycle) மருத்துவமனை வார்டுக்குள் கொண்டு வந்துள்ளார். தனது மனைவியை மிதிவண்டியின் பின்னால் அமர வைத்து, ஒரு கையால் அவரைத் தாங்கியபடியே, மற்றொரு கையால் மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு மருத்துவமனை வராண்டாவில் அவர் நடந்து செல்லும் காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைக்கின்றன. இந்த வீடியோ “தேசி ஜுகாட்” (Desi Jugaad) எனும் உள்ளூர் சமயோசித புத்தி என ஒருபுறம் பாராட்டப்பட்டாலும், அரசு மருத்துவமனையின் அவல நிலையை இது அம்பலப்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. “2026-லும் ஒரு அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதியான சக்கர நாற்காலி கூட இல்லையா?” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கூட முறையான வசதிகளைச் செய்து தராத மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும், சுகாதாரத் துறையின் மெத்தனப் போக்கின் மீதும் சமூக ஆர்வலர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
