‘என் மனைவியை யாரும் தொட்டு நடிக்கக் கூடாது… இயக்குனர் இருக்கவே கட் சொன்ன நடிகையின் கணவர்’- எம் ஜி ஆர் படத்துக்கு வந்த சிக்கல்!

By vinoth

Published on:

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால் படங்களில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர் படத்தில் யார் யார் நடிக்க வேண்டும், யார் பாடல் எழுத வேண்டும், பாடலுக்கான மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்தான் முடிவு செய்வார்.

அதே போல சம்பள விஷயத்தில் ஒருசிலரிடம் மிகவும் கறாராக நடந்துகொண்டாலும், பெரும்பாலானவர்களிடம் எம் ஜி ஆர் மிகவும் பெருந்தன்மையாகவே நடந்து கொண்டுள்ளார். எம் ஜி ஆரால் சினிமாத்துறையில் வாழ்ந்தவர்கள் பலர். வீழ்ந்தவர்களும் சிலர்.

   

எம் ஜி ஆர் 1930 களிலேயே தன்னுடைய பதின் வயதிலேயே சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார். ஆனாலும் அவருக்கு சொல்லிக்கொள்ளும் படியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இடையில் அவர் ஹீரோவாக நடித்த படங்களும் கைவிடப்பட்டன. அதன் பிறகுதான் அவருக்கு மந்திரி குமாரி என்ற படத்தின் மூலம் முதல் ஹிட் அமைந்தது.

எம் ஜி ஆர் ஹீரோ ஆவதற்கு முன்னர் துணைக் கதாபாத்திரத்தில் நடித்த படங்களில் ஒன்று அபிமன்யு. இந்தப் படத்தில் அபிமன்யுவாக எஸ்.எம்.குமரேசன் என்ற நடிகர் நடித்திருந்தார். அவரின் மனைவியான வத்சலா கதாபாத்திரத்தில் யூ.ஆர்.ஜீவரத்தினம்  நடித்திருந்தார். படத்தில் செகண்ட் ஹீரோவாக அர்ஜூனன் கதாபாத்திரத்தில் எம்ஜிஆர் நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே கதாநாயகி ஜீவரத்தினம், தயாரிப்பு நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்த டி.எஸ்.வெங்கடசாமி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். அதன் பிறகு ஷூட்டிங் நடக்கும்பொதெல்லாம் ஜீவரத்தினத்தை கதாநாயகன் குமரப்பன் தொட்டு நடிப்பது போன்ற காட்சிகள் வரும்போதெல்லாம் டி எஸ் வெங்கடசாமி கட் சொல்லி காட்சியை எடுக்க விடாமல் தடுத்து வந்துள்ளார்.

எப்படியோ ஒருவழியாக படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் வெங்கட்சாமியின் இந்த குணத்தால் யு ஆர் ஜீவரத்தினத்துக்கு அதன்பிறகு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டதாம்.