ஹரியானா மாநிலம் பரீதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான துணிக்கடை தொழிலதிபர் ராகுல் என்பவர், தனது கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், தனது மரணத்திற்கு மனைவியும் அவரது குடும்பத்தினரும்தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ராகுல் அந்த வீடியோவில், “நான் வீட்டைப் பெருக்குவது, துடைப்பது, பாத்திரங்களைக் கழுவுவது போன்ற அனைத்து வீட்டு வேலைகளையும் செய்த போதிலும், என் மனைவி என்னைத் தொடர்ந்து அடித்து துன்புறுத்தினார்” என்று உருக்கமாகக் கூறியுள்ளார். மேலும், தனது பெற்றோரைப் பார்க்க அனுமதிக்காமல் தனிக்குடித்தனம் போக வற்புறுத்தியதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு தன் மீது காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ராகுலின் தற்கொலை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் “ஷாதி பர்பாதி” என்ற ஹேஷ்டேக்குகளுடன் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவத்தின் அடிப்படையில், ராகுலின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 8 பேர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
