தமிழ் சினிமாவில் இன்று டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விக்ரம். அவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான் தங்கலான் திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. மற்ற நடிகர்களைப் போல இல்லாமல் விக்ரம் தன்னுடைய கதாபாத்திரத்துக்காக அதிகமாக மெனக்கெடுபவர். கெட்டப்புகளை மாற்றி உடல் எடையை ஏற்றி இறக்கி வருடக்கணக்கில் அர்ப்பணிப்புடன் நடிப்பவர்.
1999 ஆம் ஆண்டு வெளியான சேது திரைப்படம் தமிழ் சினிமாவுக்குப் பல கலைஞர்களை கொடுத்தது. அந்த படத்தின் வெற்றியால்தான் பாலா, அமீர், சசிகுமார் மற்றும் விக்ரம் ஆகியோர் தமிழ் சினிமா உலகுக்குக் கிடைத்தனர். சேதுவின் வெற்றியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட விக்ரம் அடுத்தடுத்து தில், தூள், சாமி, அந்நியன் என சூப்பர் ஹிட்ஸ்களாகக் கொடுத்து முன்னணி நடிகரானார்.
ஆனால் ஒரு கட்டத்தில் அவர் நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பதைத் தவிர்த்து கெட்டப் போடும் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நிறைய தோல்விப் படங்களைக் கொடுத்து பின்தங்கினார். அதனால் அவருக்குப் பின்னர் வந்த தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரின் மார்க்கெட்டைக் கூட இப்போது அவரால் பிடிக்க முடியவில்லை.

சேது படத்துக்குப் பிறகு அந்நியன் படம் வரை விக்ரம்மின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது என சொல்லலாம்.அந்த காலகட்டத்தில் தொடர்ச்சியாக ஹிட் படங்கள் கொடுத்து வியாபாரத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருந்தார் விக்ரம். ஒரு வார இதழ் அப்போது வெளியிட்ட கட்டுரையில் இதைக் குறிப்பிட்டிருந்தது.
ஆனால் அதன் பிறகுதான் விக்ரம்மின் வீழ்ச்சி தொடங்கியது. நல்ல கதைகளை தேடாமல், தனக்கு அதிக கெட்டப்கள் இருக்கும் கதைகளாக தேட ஆரம்பித்தார். எல்லாப் படத்துக்கும் உடலை ஏற்றி இறக்குகிறேன் பார் என கிம்மிக்ஸ் வேலைகள் காட்ட ஆரம்பித்தார். இதனால் அவர் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படி அவர் தொடர்ந்து சொதப்பியதால் நல்ல விமர்சனங்களைப் பெற்ற அவரின் வீர தீர சூரன் படம் கூட பெரிய வசூலை எட்ட முடியவில்லை. ஒரு வாரத்தில் 52 கோடி ரூபாய்தான் வசூலித்துள்ளது.
