வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் தடையில்லாத பயணத்தை அனுபவிக்க புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. ஆண்டுக்கு 200 பயணங்களை மேற்கொள்ள 3000 ரூபாய் விலையில் புதிய பாஸ்டேக் ஆண்டு கட்டண பாஸ் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பாஸ் தற்போது உள்ள பாஸ்டேக் முறையில் செயல்படும். இது செயல்பட தொடங்கிய நாளிலிருந்து ஒரு வருடம் அல்லது 200 பயணங்கள் செல்லுபடியாகும். தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியை ஒருமுறை கடப்பது ஒரு பயணமாக கணக்கிடப்படும். தற்போது இருநூறு பயணங்களுக்கு ஒரு பயனர் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இந்த புதிய பாஸ் மூலம் அது மூவாயிரம் ரூபாயாக குறையும்.
இதற்கான பிரத்தியேக இணைப்பு ராஜமார்க் யாத்ரா செயலி மற்றும் NHAI, MoRTH என்ற இணையதளத்தில் விரைவில் கிடைக்கும். இந்த ஆண்டு பாஸ் மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கு பொருந்தாது. இருந்தாலும் பயனர்கள் தங்கள் பாஸ்டேக் மூலம் மாநிலம் மற்றும் பிற சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தலாம். ஆனால் ஆண்டு பாஸ் கணக்கிலிருந்து பணம் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். ஆண்டுக்கு 3000 ரூபாய் செலுத்தி நாடு முழுவதும் பயணிக்கும் புதிய பாஸ்டேக் நடைமுறை வருகின்ற ஆகஸ்ட் 15 முதல் அமலுக்கு வருகிறது. வணிக நோக்கமற்ற தனியார் வாகனங்களுக்கான இந்த திட்டத்தில் கார்கள், ஜீப்கள், வேன்கள் போன்ற வாகனங்கள் இந்த பாசை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
