கோவை மாவட்டம் வால்பாறை மலைச்சாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த வேன், வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, 13-வது கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வேனில் மொத்தம் 16 பேர் பயணம் செய்த நிலையில், காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில் நேரிட்ட இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
