திருநெல்வேலியில் தனியார் நிறுவன மேலாளர் ஒருவரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து, அவரிடமிருந்து பணம் மற்றும் நகைகளைப் பறித்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் வெங்கடாசலம் என்பவர், சமூக வலைதளம் மூலம் அறிமுகமான சிலரின் அழைப்பை ஏற்று அவர்களைச் சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது அவரைத் திட்டமிட்டு ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற மர்ம கும்பல், கத்திமுனையில் மிரட்டி அவரிடமிருந்த 5 கிராம் தங்க மோதிரம் மற்றும் கூகுள்பே (Google Pay) வழியாக ரூ.20,000 பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடியது.
பாதிக்கப்பட்ட வெங்கடாசலம் இது குறித்து அளித்த புகாரின் பேரில், பேட்டை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய சக்திசுரேஷ் மற்றும் இசக்கிராஜா ஆகிய இருவரைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். ஆன்லைன் செயலிகள் மூலம் இதுபோன்று திட்டமிட்டு ஆசைவார்த்தை கூறி ஏமாற்றும் கும்பல்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
