டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2026 இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில், சர்வதேச போட்டி ஒன்றின் போது திடீரென குரங்கு ஒன்று மைதானத்திற்குள் நுழைந்ததால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதுமட்டுமின்றி, புறா எச்சம் கோர்ட்டில் விழுந்தது போன்ற சுகாதார மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. ஆரம்பத்தில் இந்த புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டவை என்று இந்திய பேட்மிண்டன் சங்கம் (BAI) மழுப்ப முயன்ற நிலையில், இந்த விவகாரம் விளையாட்டு உலகில் கடும் விவாதத்தைக் கிளப்பியது.
இந்நிலையில், இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் தலைவரும், அசாம் மாநில முதலமைச்சருமான ஹிமந்த பிஸ்வா சர்மா, ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நடத்திய கலந்துரையாடலில் இது குறித்து நகைச்சுவையாகவும், அதே சமயம் தற்காப்புடனும் விளக்கம் அளித்துள்ளார். இந்த சர்ச்சையை ஒரு பெரிய பாதுகாப்பு தோல்வியாக கருதாமல், மக்கள் இதனை “அளவுக்கு அதிகமாக எதிர்வினை” (overreaction) ஆற்றுவதாக அவர் தள்ளுபடி செய்துள்ளார். டெல்லியில் மனிதர்களாகிய நாம் தான் குரங்குகளின் இயற்கை வாழ்விடங்களை ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டியுள்ளோம் என்ற யதார்த்தத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
விலங்கு நல ஆர்வலர் மேனகா காந்தியின் பெயரை இயல்பான பாணியில் குறிப்பிட்ட ஹிமந்த பிஸ்வா சர்மா, “டெல்லியில் உங்களால் குரங்குகளை எப்படி முற்றிலுமாக விரட்ட முடியும்? அப்படிச் செய்தால் மேனகா காந்தி உங்களிடம் வந்துவிடுவார்” என்று பாலிவுட் பாணியில் வேடிக்கையாகக் கூறினார். மேலும், “விளையாட்டைப் பார்க்க குரங்கு வந்தால் என்ன தவறு? எனது வீட்டிலும் எப்போதும் குரங்குகள் இருக்கும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வனவிலங்குகளுக்கு எதிராக நாம் எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்க முடியாது. இதற்காக வீரர்கள் இரண்டு நிமிடங்கள் காத்திருப்பதில் என்ன தவறு இருக்கிறது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இறுதியாக இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேசிய அவர், “அடுத்த முறை போட்டி நடக்கும் போது குரங்கு வந்தால் அதற்கு வாழைப்பழம் கொடுங்கள்; இந்த முறையும் குரங்கு வந்தால் நானே அதற்கு வாழைப்பழம் கொடுப்பேன்” என்று கலகலப்பாகக் கூறினார். கசிரங்காவில் மைதானம் அமைத்தால் காண்டாமிருகம் வரத்தான் செய்யும் என உதாரணம் காட்டிய அவர், இந்தியாவை குறைமதிப்பிற்கு உட்படுத்தவே சிலர் இத்தகைய செய்திகளை பெரிதாக்குகிறார்கள் என்று கூறி, சர்வதேச அரங்கில் எழுந்த பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் குற்றச்சாட்டுகளை எளிதாகக் கடந்துள்ளார்.
