தமிழகத்தில் நிலவும் பத்திரப் பதிவு மோசடிகள் மற்றும் ஒரே சொத்தைப் பலருக்கு விற்பனை செய்யும் முறைகேடுகளைத் தடுக்க, கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் புதிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, இனி அசையா சொத்துக்களைப் பதிவு செய்யும்போது, அந்தச் சொத்துக்கான முந்தைய அசல் ஆவணங்கள் (தாய் பத்திரம்) மற்றும் வில்லங்கச் சான்றிதழ் ஆகியவற்றைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத் திருத்தத்தின்படி, சொத்துப் பதிவின் போது உரிமையாளரின் அசல் ஆவணங்களுடன், ஆவணம் பதிவு செய்யும் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்னதாகப் பெறப்பட்ட வில்லங்கச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட சொத்துப் பதிவுகள் நிராகரிக்கப்படும். இது போலி ஆவணங்கள் மூலம் நடைபெறும் முறைகேடுகளைத் தடுத்து, சொத்து வாங்குபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசல் ஆவணங்கள் இல்லாத நிலைகளுக்கும் இந்தச் சட்டத்தில் சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. மூதாதையர் சொத்தாக இருந்து அசல் பத்திரம் இல்லையென்றால், வருவாய்த் துறையால் வழங்கப்பட்ட பட்டாவைச் சமர்ப்பிக்க வேண்டும். அசல் ஆவணம் தொலைந்து போயிருந்தால், அது குறித்த நாளிதழ் விளம்பரம் மற்றும் காவல்துறையிடம் பெறப்பட்ட ‘கண்டறிய இயலவில்லை’ (Non-Traceable) சான்றிதழ் ஆகியவற்றைச் சமர்ப்பித்து சொத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
