டிட்வா புயல் காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. புயல் நேற்று இரவு உள்வாங்கிய நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைப்பொழிவு குறைந்துள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயலானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் சென்னையில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதால் வடமாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதிகாலை முதல் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் விடுமுறை அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
