தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்க கடலின் வடகிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வந்த நிலையில் நேற்று அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகரும் என்றும் மேற்கு வங்கம் -வங்கதேசத்தில் கரையை கடக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் இன்று தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலை போலவே மகாராஷ்டிரா கேரளா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. எனவே தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
