“அரசு வேலை வேணுமா…? அப்போ யோகா படிங்க…!” – ஹரியானா அரசின் அதிரடி உத்தரவு…!

By Swetha on ஆனி 21, 2026

Spread the love

ஹரியானா மாநில அரசு, யோகா கலையை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே கொண்டு சேர்க்கும் நோக்கில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, வரும் கல்வியாண்டு முதல் 3-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிப் பாடத்திட்டத்தில் யோகா ஒரு பாடமாகச் சேர்க்கப்பட உள்ளது. மேலும், மாநில அரசுப் பணிகளுக்கான HSSC மற்றும் HPSC நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் யோகா தொடர்பான கேள்விகள் இனி கட்டாயமாக்கப்பட உள்ளன. இதற்காகத் தேர்வுக்கான கொள்கை விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.

யோகாவை ஊக்குவிப்பதற்காகப் பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள விளையாட்டுத் துறைகள் இனி ‘விளையாட்டு மற்றும் யோகா துறை’ என மறுபெயரிடப்பட உள்ளன. பள்ளி ஆசிரியர்களுக்குச் சிறப்பு யோகா பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, பஞ்ச்குலாவின் மோர்னி பகுதியில் இயற்கை மருத்துவம் மற்றும் யோகாவிற்கான மாநில அளவிலான நிறுவனம் ஒன்றும் நிறுவப்பட உள்ளது. இவற்றுடன், மாநிலப் பல்கலைக்கழகங்களில் அமைக்கப்பட்டு வரும் 5 சிறப்பு மையங்களிலும் யோகா முக்கிய அங்கமாக இடம்பெறும் வகையில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.

   

இந்தியாவின் தொன்மையான கலை வடிவமான யோகாவைத் தினசரி வாழ்வில் பின்பற்றுவதால் மன அழுத்தம் குறைந்து, உடல் நெகிழ்வுத்தன்மையும் ரத்த ஓட்டமும் சீராகிறது. குறிப்பாக, மாணவர்களுக்கு யோகா கற்பிப்பதன் மூலம் அவர்களின் கவனச்சிதறல் குறைந்து, நினைவாற்றலும் கற்றல் திறனும் மேம்படும் என ஆய்வுகள் கூறுகின்றன. யோகாவை வெறும் உடற்பயிற்சியாகப் பார்க்காமல், நேர்மறை எண்ணங்களையும் ஒழுக்கமான வாழ்வியலையும் உருவாக்கும் ஒரு வாழ்வியல் நெறியாக மாற்றுவதே இந்த முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும்.