ஹரியானாவின் சர்க்கி தாத்ரி மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகே பட்டப்பகலில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர். நீதிமன்ற விசாரணையில் பங்கேற்பதற்காக அமித், அங்கித், சூரஜ், விஜய் உள்ளிட்ட சிலர் ஒரு ஸ்கார்பியோ காரில் சென்றுகொண்டிருந்தபோது, சர்தார் தாத்ரி காவல் நிலையம் அருகே நடந்தே வந்த மூன்று ஆயுதம் ஏந்திய நபர்கள் அந்த வாகனத்தை நோக்கி 10 முதல் 15 சுற்றுகள் சரமாரியாகச் சுட்டுவிட்டுத் தப்பியோடினர். இச்சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர காயமடைந்த இருவர் மேல் சிகிச்சைக்காக ரோத்தக்கில் உள்ள PGIMS மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இத்தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, குற்றவாளிகளைப் பிடிக்க சிறப்புப் படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு தப்பிச்செல்லும் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரோஹித் கோடாரா கும்பலின் சார்பில் நவீன் பாக்சர் என்பவர் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாகக் கூறும் குரல் பதிவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தாக்குதலில் சிக்கிய வாகனத்தில் இருந்தவர்களுக்கு ஏற்கெனவே குற்றப் பின்னணி இருப்பதாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், இச்சம்பவம் தனிப்பட்ட பகையா அல்லது ரவுடிகளுக்கிடையேயான மோதலா என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DbtoYS0TFzC/?utm_source=ig_embed&ig_rid=AUX35lffqPE9sAgL604s71_
பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், ஹரியானா மாநிலத்தில் சட்ட அமலாக்கம் மற்றும் ரவுடிக் கும்பல்களின் அச்சுறுத்தல் குறித்தான கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. சமீபகாலமாக அதிகரித்து வரும் ரவுடிகளின் மோதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்து மாநில அரசைக் விமர்சித்து வருகின்றன. குற்றச் செயல்களில் ஈடுபடும் இதுபோன்ற கும்பல்களை உடனடியாகக் ஒடுக்கி, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அம்மாநிலத்தில் மீண்டும் வலுத்துள்ளது.
