“நாங்க அதை செஞ்சிருக்கணும்” ‘சஞ்சு’ சாம்சனிடம் சரணடைந்த MI… தோல்விக்கு இதுதான் காரணமா..? ஹர்திக் ஓபன் டாக்..!!

By Soundarya on சித்திரை 24, 2026

Spread the love

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, சஞ்சு சாம்சனின் அபார சதத்தின் உதவியுடன் 207 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களுக்கு சுருண்டது.

தோல்வி குறித்து பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, பவர்-பிளே ஓவர்களில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது தங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாகக் கூறினார். “208 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்தும்போது பவர்-பிளே மிக முக்கியமானது. ஆனால் நாங்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் ஆட்டத்தில் மீண்டு வர முடியாமல் போனது,” என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், ஆடுகளத்தின் தன்மையைக் குறை கூற விரும்பவில்லை என்றும், ஒரே மாதிரியான மைதானத்தில் சென்னை சிறப்பாக விளையாடிய நிலையில் தாங்கள் பேட்டிங்கில் சொதப்பிவிட்டதாகவும் ஒப்புக்கொண்டார்.

   

தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வருவது குறித்துப் பேசிய ஹர்திக், “நாங்கள் மீண்டும் திட்டமிடல்களைச் சரியாகச் செய்ய வேண்டும். தனிப்பட்ட வீரர்களாகவும் ஒரு அணியாகவும் எங்குத் தவறு செய்கிறோம் என்பதை ஆராய்ந்து, அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டு வருவோம்,” என்று நம்பிக்கை தெரிவித்தார். அணியில் சில கடினமான மாற்றங்களைச் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும், மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்று பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்கப் போராடுவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.