உண்மையச் சொல்ல தைரியமில்லை.. ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போவது ஏன்..? செய்தியாளர் சந்திப்பில் வெடித்த ஹெச். வினோத்…!

By Swetha on வைகாசி 31, 2026

Spread the love

நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் ஹெச். வினோத்திடம், “ஜனநாயகன் படம் எப்போது ரிலீஸ்?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “படம் எப்போது வெளியாகும் என்பது என் கைகளில் இல்லை. அங்கு என்ன நடந்தது என்ற உண்மையைச் சொல்வதற்கு எனக்குத் தைரியமில்லை; அப்படியே நான் தைரியமாக உண்மையைச் சொன்னாலும், அதை ஊடகங்களில் வெளியிடுவதற்கு உங்களுக்குத் தைரியமில்லை” என்று சற்றே மர்மமான முறையில் பதிலளித்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

விஜய்யின் கடைசித் திரைப்படமாக கருதப்படும் இத்திரைப்படம், கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) மத உணர்வுகள் மற்றும் ஆயுதப்படை சித்தரிப்புகள் தொடர்பான சில ஆட்சேபனைகளை எழுப்பியதால் படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் கடும் சிக்கல் ஏற்பட்டது. தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடிய போதிலும், இந்த விவகாரம் மறுஆய்வுக் குழுவிற்கு மாற்றப்பட்டு இன்னும் இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறியாகவே நீடித்து வருகிறது. மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் இத்திரைப்படத்தின் முழுப் பதிப்பும் இணையதளங்களில் சட்டவிரோதமாக கசிந்தது படக்குழுவினருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

   

இதற்கிடையில், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செயலிகளில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூன் 19 அன்று வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியானதால், ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படம் வெளியாகிவிடும் என ரசிகர்கள் நம்பினர். எனினும், படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தணிக்கைச் சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழக திரைப்பட தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜ்மோகனும் பேசுகையில், தணிக்கைச் சான்றிதழ் சட்டப்பூர்வமாக முழுமையாகப் பெற்ற பின்னரே படம் வெளியாகும் என்றும், அரசியல் காரணங்களுக்காக எந்தப் படமும் வேண்டுமென்றே முடக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். இயக்குநர் வினோத்தின் இந்த அதிரடி கருத்து சமூக வலைதளங்களில் தற்பொழுது புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.