விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை எச். ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய எச்.ராஜா, முதலமைச்சர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் தமிழக சட்டம் ஒழுங்கு இல்லை. ஏற்கனவே சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் அஜித்குமார் போலீஸாரால் அடித்து கொலை செய்யப்பட்டார். நியாயம் தர்மத்தை பற்றி கவலைப்படாமல் உண்மையை மறைக்க அரசு முயற்சி செய்து வருகின்றது. தற்போது நெல்லையில் கவின் ஆணவ கொலை செய்யப்பட்டுள்ளார். ஜாதி ஒழிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்.
அப்படி என்றால் ஆணவ கொலை எதனால் நடந்தது என்று திமுக தான் பதில் சொல்ல வேண்டும். ஜாதியை ஒழித்து விட்டதாக திமுகவும் திராவிட சித்தாந்தம் உடையவர்கள் பேசியது அனைத்துமே பொய் என்று நன்றாக தெரிகிறது. திராவிட சித்தாந்தம் தமிழகத்திற்கு வந்த பிறகுதான் ஆணவ கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானம். திராவிட இயக்கங்கள் தமிழகத்தின் அழிவு சக்தி என்பதற்கு ஆணவ கொலைகள் பெரிய எடுத்துக்காட்டு.
ஆணவ படுகொலை தொடர்பாக தேசிய அளவில் மத்திய அரசு சிறப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். ஒருவித மனநல பாதிப்பால் அவர் இப்படி பேசி வருகின்றார். திருமாவளவன் முதலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விருப்பம் இருப்பவர்கள் இருக்கலாம். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழக முழுக்க திமுக என்பது தீய சக்தி என்ற வாக்காளர்களுக்கு சொல்லிக் கொடுத்துதான் அதிமுகவை நடத்தினர். எனவே அதிமுகவில் இருந்த யாராக இருந்தாலும் குச்சியால் திமுகவை தொட்டால் கூட அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
