விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜாவின் காரை தமிழக வெற்றிக் கழக கொடி கட்டிய காரில் வந்த அரசு வழக்கறிஞர் வழிமறித்து முழக்கமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளது.
திண்டிவனம் அடுத்த ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே எச்.ராஜா காரில் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு முன்னால் ‘G’ என்ற அரசு முத்திரையுடனும் தவெக கொடியுடனும் சென்ற காரை அவர் வழிமறித்து நிறுத்தியுள்ளார். காரில் இருந்த செங்கல்பட்டைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சசிகுமாரிடம் எச்.ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சசிகுமார் முன்பு பா.ஜ.க மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்தவர் என்பதும், தற்போது தவெக-வில் இணைந்துள்ளதால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் எச்.ராஜா அவரைத் திட்டிவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் சசிகுமார், எச்.ராஜாவின் காரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் பின்தொடர்ந்து சென்று திண்டிவனம் மேல்பேட்டை அருகே மீண்டும் வழிமறித்துள்ளார். காரை விட்டு இறங்கிய சசிகுமார், எச்.ராஜாவின் கார் முன்பாகவே அமர்ந்து அவருக்கு எதிராகக் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பியதால், அங்கு இரு தரப்பு ஆதரவாளர்களும் திரண்டு கடுமையான மோதல் சூழல் உருவானது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஏற்பட்ட இந்த மோதலால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்; போக்குவரத்தும் சில காலம் ஸ்தம்பித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனைவரையும் அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
