ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவருக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கும் நேற்று அரும்பாக்கம் ரேணுகாம்பாள் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இருவரும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்தோடு நேற்று திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் மணமக்கள் மற்றும் உறவினர்கள் கோவில் வளாகத்தில் இருந்தபோது மணமகன் அஜித்குமார் இயற்கை உபாதை கழிப்பதற்காக அங்கிருந்த கோவில் குளத்தின் அருகே சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பாததால் குடும்பத்தினர் தேடிச்சென்ற போது கோவில் குளத்தில் அவர் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு குளத்தின் அருகே சென்ற போது கால் தவறி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அஜித்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமண நாளில் மணக்கோலத்தில் மணமகன் உயிரிழந்த இந்த துயர சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
