இந்தியாவின் குட்டி விஞ்ஞானிகள்.. வெறும் ₹6,000-ல் பறக்கும் போர் விமானத்தை உருவாக்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்… வைரல் வீடியோ..!!!

By Soundarya on பங்குனி 15, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம், அகராபாத் தொகுதியில் உள்ள பிலாவலி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள், போதிய வசதிகள் இல்லாத சூழலிலும் தங்களது அபார திறமையால் F-22 ராப்டார் போர் விமானத்தின் பறக்கும் மாதிரியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். 4 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் பிரன்ஷி குமாரி, ஆஷி, ஹிருதேஷ் குமார், ரஞ்சனா குமாரி மற்றும் கார்த்திக் சர்மா ஆகிய ஐந்து மாணவர்கள் ஒன்றிணைந்து இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இவர்களது இந்த முயற்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

சுமார் ₹6,000 என்ற மிகக் குறைந்த செலவில், தெர்மோகோல் போன்ற இலகுரக பொருட்கள் மற்றும் அடிப்படை மின்னணு பாகங்களைக் கொண்டு இந்த மாதிரி விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்களது ஆசிரியர் ஆஷிஷ் குமாரின் சிறந்த வழிகாட்டுதலுடன் மாணவர்கள் இத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்த விமானத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க முடியும் என்பதோடு, இது சுமார் 1 முதல் 1.5 கிலோமீட்டர் தூரம் வரை வானில் பறக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

   

உத்தரப் பிரதேச அடிப்படைக் கல்வித் துறையின் “ரோபோடிக்ஸ் கி பாத்ஷாலா 2026” திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாதிரி விமானத்தை நேரடியாக விண்ணில் செலுத்திச் சோதிப்பதற்கு முன்பாக, மாணவர்கள் பள்ளியில் உள்ள கணினி சிமுலேட்டரில் விமானத்தைப் பறக்கவிடும் பயிற்சியை முறையாக மேற்கொண்டுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களின் இந்தத் தொழில்நுட்பப் புரட்சி, கிராமப்புற மாணவர்களிடையே அறிவியல் மற்றும் ரோபோடிக்ஸ் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.