“வீட்டுக்கு லைட் வேணுமா, அப்போ என் கூட இருட்டுக்கு வா”… மின் இணைப்பு கேட்ட பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த அரசு அதிகாரி… ஆடியோ ஆதாரத்துடன் சிக்கிய பின்னணி…!

By Nanthini on மாசி 2, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த ஏழைப் பெண் ஒருவருக்கு, மின் வாரிய அதிகாரி பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளமடம் அருகே திருப்பதிச்சாரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறார். இவர் தான் புதிதாகக் கட்டிய சிறிய வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக உள்ளூர் மின் வாரிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அப்போது அங்கு பணியாற்றி வந்த பீமநகரி பகுதியைச் சேர்ந்த தாணு மூர்த்தி என்ற அதிகாரி, அந்தப் பெண்ணின் மனுவை பரிசீலிப்பதாகக் கூறி ஆவணங்களைப் பெற்றுள்ளார்.

மனு அளித்து பல நாட்களாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், அந்தப் பெண் மீண்டும் அலுவலகத்திற்குச் சென்று அதிகாரியைச் சந்தித்துள்ளார். அப்போது, நிலம் தொடர்பான சில சிக்கல்கள் இருப்பதாகக் கூறி அந்தப் பெண்ணை அலைக்கழித்த தாணு மூர்த்தி, விவரங்களைத் தெரிவிப்பதாகக் கூறி பெண்ணின் செல்போன் எண்ணைப் பெற்றுள்ளார். அரசு அதிகாரி என்ற நம்பிக்கையில் அந்தப் பெண்ணும் தனது எண்ணை அளித்துள்ளார். ஆனால், அதன் பிறகுதான் அந்த அதிகாரியின் அநாகரிகமான முகம் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

   

உதவி செய்வது போலத் தொடர்ந்து அந்தப் பெண்ணைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிய அதிகாரி, ஒரு கட்டத்தில் தனது சுயரூபத்தைக் காட்டியுள்ளார். மின் இணைப்பு பெற்றுத் தர வேண்டுமானால், அதற்கு கைமாறாகத் தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று அந்தப் பெண்ணை வற்புறுத்தியுள்ளார். வேலையில் தனக்கு அதிக அழுத்தம் இருப்பதாகவும், அதனால் மன அழுத்தத்தைக் குறைக்க ஜாலியாக இருக்க இடத்தைத் தேர்வு செய்யுமாறும் கூறி அருவருக்கத்தக்க வகையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

   

அதிகாரியின் இந்த அத்துமீறலைக் கண்டு கடும் ஆத்திரமடைந்த அந்தப் பெண், துணிச்சலுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்சார வாரிய உயரதிகாரிகளிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இது குறித்த தகவல் கசிந்ததை அறிந்ததும், சிக்கலில் சிக்கிக் கொள்வோம் என்று பயந்த அதிகாரி தாணு மூர்த்தி தற்போது தலைமறைவாகியுள்ளார். மின் இணைப்பு வழங்க வேண்டிய அரசு அதிகாரியே, உதவி கோரி வந்த பெண்ணிடம் இவ்வாறு நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.