தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு அறிவித்த 3,000 ரூபாய் பொங்கல் போனஸ் தொகை இன்னும் வழங்கப்படாததால், அரசுப் பணியாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். வழக்கமாகப் பண்டிகைக்கு முன்னதாகவே வரவு வைக்கப்படும் இந்தத் தொகை, இந்த ஆண்டு அரசின் IFHRMS (www.karuvoolam.tn.gov.in) இணையதளத்தில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாகத் தாமதமாகி வருகிறது. ஆவணங்களைப் பதிவேற்றுவதில் ஏற்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பச் சிக்கலால், போனஸ் பட்டியலைத் தயாரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இருப்பினும், தகுதியான அனைத்து ஊழியர்களுக்கும் பொங்கல் பண்டிகை தொடங்குவதற்கு முன்பே போனஸ் தொகை கிடைப்பதை உறுதி செய்ய நிதித்துறை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்து, அடுத்த சில தினங்களுக்குள் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணத்தைச் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
