தமிழக அரசுத் துறைகளில் பணி ஒழுங்கு மற்றும் நேர மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில், ஜூன் 1 முதல் பயோமெட்ரிக் மற்றும் முக அடையாள (Face ID) வருகைப்பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மைத் துறையின் (HRM) அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த டிஜிட்டல் வருகைப்பதிவு முறை அமலுக்கு வருகிறது. தலைமைச் செயலக வரலாற்றிலேயே முக அங்கீகார முறை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
புதிய உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட துறையின் ஊழியர்கள் அனைவரும் காலை 10:00 மணிக்கு முன்பாக அலுவலகத்திற்கு வருகை தந்து, தங்களது வருகையை டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய வேண்டும். மேலும், மறுஉத்தரவு வரும் வரை இந்த டிஜிட்டல் முறையுடன் சேர்த்து தற்போதைய வழக்கமான கையேடு (Manual) வருகைப் பதிவேட்டிலும் ஊழியர்கள் கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பணி நேரத்தில் ஊழியர்கள் அனைவரும் தங்களின் அடையாள அட்டையை (ID Card) கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளத
அரசு ஊழியர்கள் சிலர் தொடர்ந்து தாமதமாக பணிக்கு வருவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இத்திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டபோது ஊழியர்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது அனைத்துப் பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டு முழுமையாக அமல்படுத்தப்படுகிறது. இந்த டிஜிட்டல் வருகைப்பதிவு முறை, வரும் மாதங்களில் தலைமைச் செயலகத்தின் மற்ற துறைகளுக்கும், தொடர்ந்து மாநிலத்தின் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
