கன்னியாகுமரி மாவட்டம் ராமன் துறை மீனவ கிராமத்தை சேர்ந்த சுஜின்(35) என்பவர் முல்லூர் துறை மீனவ கிராமத்தை சேர்ந்த மரியதாஸ் புஷ்பரதி தம்பதியின் மகளான கேத்தரின் பிளஸ்சி (23) என்பவரை காதலித்துள்ளார். முதலில் நட்பாக பழகிய இவர்கள் நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே கத்தார் நாட்டில் மீன்பிடித் தொழில் செய்து சுஜின் காதலியை ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து படிப்பை முடித்துவிட்டு பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்ததாக கூறி கேத்தரின் பெங்களூரு சென்றுள்ளார்.
பிறகு நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருவரும் முடிவெடுத்து கன்னியாகுமரி மாவட்டம் அருகே உள்ள ஒரு சர்ச்சில் வைத்து 2023 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அப்போது கேத்தரின், என் அக்கா திருமணமாகாமல் இருப்பதால் எனக்கு திருமணம் ஆன விவகாரம் வெளியே தெரிந்தால் அவளது திருமணம் பாதிக்கும் என்று கூறி இருவரும் திருமணத்திற்கு பிறகு தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் சுஜின் கத்தார் நாட்டுக்கும் கேத்தரின் பெங்களூருக்கும் சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து பெங்களூரு சென்று தனியார் நிறுவனத்தில் பயிற்சிக்கு சேர்ந்த கேத்தரின் வீட்டுக்கு அனுப்ப, ரூம் வாடகை, தன்னுடைய இதர செலவுகள் என பல செலவுகளுக்காக பலமுறை ஜிபே மூலமாகவும் வங்கி கணக்கு மூலமாகவும் சுஜினிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். இதுபோன்ற கடந்த இரண்டு ஆண்டுகளில் 12 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கேத்தரையின் அக்கா திருமணம் முடிந்த பிறகும் இருவரும் சேர்ந்து வாழ மூன்று முறை கத்தார் நாட்டில் இருந்து சுஜின் வந்த பிறகு அதற்கு சம்மதிக்காமல் இருந்துள்ளார்.

பிறகு விசாரித்த போது கேத்தரின் பெங்களூரில் பல ஆண் நண்பர்களுடன் பழகி வந்தது தெரிய வந்தது. இந்நிலையில் காதலை பல ஆண்டுகளாக சுற்றித் திரியும் புகைப்படங்களை பார்த்த சுஜின் அவருக்கு அனுப்பிய பணத்தின் ஆவணங்கள், அவர் அனுப்பிய மெசேஜ் ஆதாரங்கள், திருமணம் செய்து கொண்ட ஆதாரம், இருவரும் இருக்கும் புகைப்படங்கள் என பல ஆதாரங்களை திரட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
