பட்டப்பகலில் 4 வயது சிறுமி கடத்தல்… தாத்தா, பாட்டியின் அதிரடி போராட்டத்தையும் மீறி காரில் தூக்கிச் சென்ற கும்பல்.. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!!

By Soundarya on வைகாசி 20, 2026

Spread the love

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பள்ளி முடிந்து தனது தாத்தா, பாட்டியுடன் ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்த சிறுமியை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென தாக்க முற்பட்டுள்ளனர். இந்த பதற்றமான காட்சிகள் அங்குள்ள குடியிருப்புப் பகுதியின் சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சிறுமியைக் கடத்த முயன்றபோது, அவரது தாத்தா மற்றும் பாட்டி தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் கடத்தல்காரர்களுடன் தைரியமாகப் போராடினர். அப்போது அங்கு வந்த ஒரு வெள்ளை நிற கார் மற்றும் பைக்குகளில் இருந்த நபர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றனர். முதியவர்கள் இருவரும் காரின் முன்பக்கத்தை மறித்து நிறுத்த முயன்றும், கடத்தல்காரர்கள் காரை வேகமாக ஓட்டி தப்பிச் சென்றனர். முதியவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினரும் காரைத் துரத்தியும் அவர்களால் கடத்தல்காரர்களைப் பிடிக்க முடியாமல் போனது.

   

இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் குடும்பத் தகராறு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியரான அச்சிறுமியின் தந்தை, தனக்கும் தனது மனைவிக்கும் இடையே நீதிமன்றத்தில் குழந்தை உரிமை (Custody) தொடர்பான வழக்கு நடந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது மனைவியும் மாமியாரும் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, சில நபர்களின் உதவியுடன் தனது மகளைக் கடத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.