ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் இளமை இதோ இதோ, ஒத்த ரூபா தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி ஆகிய பாடல்கள் படத்தின் முக்கிய காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருந்தது. தனது அனுமதி இல்லாமல் பாடல்களை படத்தில் பயன்படுத்தியதற்காக மைத்திரி மூவி மேக்கர் தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் அந்த பாடல்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இப்படியான நிலையில் இந்த விவகாரம் குறித்து இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

அதில், எப்போதுமே இசை நிகழ்ச்சிகளுக்கு என்னுடைய அண்ணன் என்னை அழைத்துச் செல்ல மாட்டார். ஏனென்றால் நீ நடக்க முடியாமல் நடந்து வருவாய் அதை பார்க்கும் போது எனக்கு மேடையில் கவனம் இருக்காது என்று காரணம் சொல்வார். ஆனால் நான் வேண்டுமென்றே அவர் முன்னால் நடனமாடி காட்டி இருக்கிறேன். அதனைப் போல அண்மையில் சிம்பொனி அமைக்க லண்டன் சென்று இருந்தார். அப்போது எனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி என்னை இங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார். இளையராஜாவிற்கு இருக்கும் ஒரே ஒரு தம்பி நான் மட்டும் தான். இதற்கு மேல் வேறு ஏதாவது வேண்டுமா? உலகமே புகழக்கூடிய ஒரு சிம்பொனியை எழுதி வெளிநாட்டுக்காரர்கள் மூக்கில் விரலை வைக்க கூடிய அளவுக்கு அவர் சாதனை படைத்துவிட்டு இந்தியா திரும்பி இருக்கிறார்.

பல புகழுக்குரிய அண்ணனும் நானும் ஒரே வயிற்றில் பிறந்திருக்கிறோம் என்பதே கடவுள் எனக்கு கொடுத்த மிகப்பெரிய பாக்கியம். எல்லாமே என்னுடைய அண்ணன் எனக்கு கொடுத்தது தான். அந்த காலத்தில் கேட்கக்கூடிய பாடல்கள் எல்லாம் மிகவும் ரசிக்கும்படி அமைதி கொடுத்தது. ஆனால் இந்த காலத்தில் வரக்கூடிய பாடல்களை எல்லாம் கேட்கவே முடியவில்லை. அதனைப் போலவே படத்தில் அனைவரும் துப்பாக்கியை வைத்துக் கொண்டே இருக்கின்றனர். இப்போது வெளிவரும் படங்களில் வன்முறை அதிகமாக உள்ளது. நல்ல நடிகர் கமல்ஹாசன் கூட தற்போது இந்த காலத்திற்கு ஏற்றபடி மாறிவிட்டார். நல்ல கதைகளோடு இளையராஜாவிடம் வந்தால் அவர் நிச்சயம் இலவசமாகவே இசை அமைத்துக் கொடுப்பார்.

காப்பி ரைட்ஸ் விவகாரத்தில் உலக அளவில் என்ன விதி இருக்கிறதோ அதை தான் நாங்களும் பின்பற்றுகிறோம். இந்திய விதியை நாங்கள் பின்பற்றவில்லை. கதை ஆசிரியருக்கு கதையில் உரிமை உண்டு. அந்த படம் எத்தனை மொழிகளில் வெளிவந்தாலும் அவர்களுக்கு அதில் உரிமை உள்ளது. முதலில் சரஸ்வதி ஸ்டோர்ஸ் நிறுவனத்துடன் நாங்கள் ஒப்பந்தம் போட்டிருந்தபோது படத்தின் பூஜை என்று அவர்கள் பத்தாயிரம் ரூபாய் கொடுப்பார்கள். ஆனால் எங்களுடைய அன்னக்கிளி மற்றும் பத்ரகாளி உள்ளிட்ட திரைப்படங்களின் கேசட்டுகள் அவ்வளவு விற்பனையாக இருக்கின்றன. எங்களுக்கு அதிலிருந்து ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. அதன்பிறகு என்னுடைய அண்ணன் எந்த படமாக இருந்தாலும் அதனுடைய இசை உரிமையை வாங்கிக் கொள்வார்.

நீங்கள் 7 கோடி ரூபாய்க்கு ஒரு மியூசிக் டைரக்டரை வைத்திருக்கிறீர்கள். அவன் போட்ட பாட்டுக்கு கைதட்டு வராமல் எங்களுடைய பாட்டுக்கு ரசிகர்கள் கை தட்டுகிறார்கள். அப்படி இருக்கும்போது அதற்கான கூலி எங்களுக்கு வரவேண்டும். எங்களுடைய பெயரை போடாமல் மற்றொரு மியூசிக் டைரக்டருக்கு அவ்வளவு கோடிகள் கொடுத்தும் அவரால் நாங்கள் கொடுத்த இசையை கொண்டு வர முடியவில்லை. அப்படியானால் எங்களுக்கும் அதில் பங்கு இருக்கு. நீங்கள் எங்களிடம் அனுமதி கேட்டால் நிச்சயமாக இளையராஜா இலவசமாகவே கொடுத்து விடுவார். அவளிடம் அனுமதி வாங்காமல் போட்டால் தான் கோபம் வருகிறது.

அதனால் தான் சண்டை போடுகிறார். இளையராஜாவுக்கு பணத்தாசை எல்லாம் கிடையாது. எங்களிடம் பணம் கொட்டி கிடப்பதால் அதனை நாங்கள் எப்படி செலவு செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம். அது அஜித் படம் என்றெல்லாம் சொல்கின்றனர். அதெல்லாம் எங்களுக்கு தெரியாது அது எங்களுடைய பாட்டு அவ்வளவுதான். உங்களுடைய மியூசிக் டைரக்டரால் அப்படியான இசையை கொடுக்க முடியவில்லை, எங்களுடைய பாடல்கள் தான் படத்தை ஜெயிக்க வைக்கிறது. என்னுடைய அனுமதி இல்லாமல் என்னுடைய சொத்தை எப்படி நீ பயன்படுத்தலாம். அந்த கோபம் தானே தவிர மற்றபடி வேறொன்றும் இல்லை என்று கங்கை அமரன் பேசி உள்ளார்.
