பெங்களூருவைச் சேர்ந்த சகுந்தலா என்ற பெண், ரேஷ்மா மற்றும் நஷ்ரத் என்பவர்களிடம் கடன் வாங்கியிருந்தார். நிதி நெருக்கடி காரணமாகக் கடந்த சில மாதங்களாக வட்டி மற்றும் அசல் தொகையைத் திரும்பக் செலுத்த முடியாமல் வீட்டை காலி செய்துவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், வேலை தருவதாக கூறி சகுந்தலாவை வரவழைத்த நஷ்ரத், ரேஷ்மா மற்றும் அவரது கணவர் சுஹைல் அடங்கிய கும்பல், அவரைப் பலவந்தமாக ஆட்டோவில் கடத்திச் சென்று பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள அறையில் அடைத்து வைத்தது. அங்கு அவரை நிர்வாணப்படுத்தி, அடித்து உதைத்து வீடியோ எடுத்துக்கொண்ட அந்த கும்பல், வட்டியோடு சேர்த்து ரூ.11 லட்சம் தராவிட்டால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளது. மேலும் ஒரு வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்று வெற்றுப் பேப்பரிலும் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
சகுந்தலாவின் தாயார் அளித்த புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், சகுந்தலாவை பத்திரமாக மீட்டதுடன், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட ரேஷ்மா, நஷ்ரத், சுஹைல் உட்பட 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
