தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் வரும் 2026 ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. இதையொட்டி, அவர் மீண்டும் டெல்லி அரசியலுக்குச் செல்லாமல், தமிழக மாநில அரசியலில் முழு கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளார். வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமாகா சார்பில் வலுவான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில், அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் 12 தொகுதிகளை ஒதுக்கக் கோரி அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
திடீரென ஜி.கே.வாசன் 12 தொகுதிகளைக் கேட்டு கோரிக்கை விடுத்திருப்பது எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிமுக நேரடியாக சுமார் 170 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள சூழலில், கூட்டணிக் கட்சிகளான பாமக மற்றும் பாஜகவிற்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிலையில், தமாகாவின் இந்த அதிரடி டிமாண்ட் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறியை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜனவரி 23-ம் தேதிக்குள் கூட்டணிகளை உறுதி செய்ய அதிமுக இலக்கு நிர்ணயித்துள்ளதால், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
