நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேர்வு எழுதிக் கொண்டிருந்த 18 வயது மாணவர் ஒருவர், தேர்வின் நடுவே தனக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்படுவதாகத் தொடர்ந்து நாடகமாடியுள்ளார். தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களிடம் அனுமதி பெற்று, அடிக்கடி கழிவறைக்குச் சென்று வருவதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அந்த மாணவர் மிகக் குறுகிய கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் வயிற்று வலியைக் காரணம்காட்டி கழிவறைக்குச் சென்றதால், அங்கிருந்த தேர்வு அதிகாரிகளுக்கு அவர் மீது பலத்த சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த மாணவர் பயன்படுத்திய கழிவறைக்குச் சென்று அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த டாய்லெட் ஃபிளஷ் (Bathroom flush) தொட்டிக்குள் ஒரு மொபைல் போன் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
விசாரணையில், அந்த மாணவர் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில்களைத் தேடுவதற்காகவே இந்த நூதன முறையைக் கையாண்டது தெரியவந்தது. கழிவறைக்குள் மறைத்து வைத்திருந்த மொபைல் போன் மூலம் கூகுள் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளைப் பயன்படுத்தி, தேர்வுக்கான விடைகளை அவர் திருட்டுத்தனமாகத் தேடி எழுதியுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த மாணவர் மீது தேர்வு முறைகேடு சட்டத்தின் கீழ் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
