சென்னை பெரம்பூரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவியின் துயரத்தைக் கண்டு சகிக்க முடியாமல், குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்த தந்தை, தன் மகன் மற்றும் மனைவிக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர் சங்கராச்சாரி மடம் பகுதியைச் சேர்ந்த சகாயம் செபாஸ்டின் என்பவரின் மனைவி பியூலா, நீண்ட நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு சிகிச்சைகள் அளித்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், ஒட்டுமொத்த குடும்பமும் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளது.
வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியின் உச்சமாக, இந்த உலகத்தை விட்டு அனைவரும் ஒன்றாகச் சென்றுவிடலாம் என செபாஸ்டின் முடிவெடுத்துள்ளார். இதற்காக அவர் திட்டமிட்டு கடைக்குச் சென்று கேக் வாங்கி வந்துள்ளார். தற்கொலைக்கு முன்பாக குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி மகிழ்ச்சியாகக் கொண்டாடிய அவர், யாருக்கும் தெரியாமல் அதில் விஷத்தைக் கலந்துள்ளார். அந்த கேக்கைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே 4 வயது மகன் யுவன் ஹாண்டோ, மனைவி பியூலா மற்றும் 8 வயது மகள் இவாஞ்சலி ஆகியோர் மயங்கி விழுந்துள்ளனர்.
தன் கண் முன்னால் குடும்பத்தினர் மயங்கியதைக் கண்ட செபாஸ்டின், தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையே மயக்கத்தில் இருந்த சிறுமி இவாஞ்சலி, ஒரு கட்டத்தில் கண் விழித்துப் பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பியம் காவல்துறையினர், நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் செபாஸ்டின் மற்றும் அவரது மகன் யுவன் ஆகிய இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் பியூலா மற்றும் அவரது மகள் இவாஞ்சலி ஆகிய இருவரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். புற்றுநோய் தந்த வலியால் ஒரு குடும்பமே சிதைந்து போன இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தற்கொலைக்கான முழுமையான பின்னணி குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
