பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை வாங்கியுள்ளார். ஆனால், அந்த சமோசாக்களின் உள்ளே இருந்து ஒருவித துர்நாற்றம் வீசியதுடன், ஐஆர்சிடிசி (IRCTC) அதிகாரப்பூர்வ மெனு பட்டியலின்படி இரண்டு சமோசாக்களின் விலை 20 ரூபாய் மட்டுமே என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அவர் அந்த வியாபாரியிடம் புகார் அளித்தபோது, அவர் மிகவும் மிரட்டும் தொனியிலும் மரியாதையின்றியும் சர்பராஸை நடத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சர்பராஸ் உடனடியாக ரயில்வே உதவி எண்ணான 139-ஐத் தொடர்பு கொண்டு அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுத்த ரயில்வே நிர்வாகம் சம்பந்தப்பட்ட தரப்பிற்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்தது. ஆனால், அபராதம் விதிக்கப்பட்ட கோபத்தில் அந்த வியாபாரி சர்பராஸைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கத் தொடங்கியுள்ளார். இச்சம்பவம் தற்பொழுது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருப்பதுடன், இன்றைய காலகட்டத்தில் ரயில்வே ஒப்பந்தங்கள் அனைத்தும் ரவுடிகளின் கைகளுக்குச் சென்றுவிட்டதாகவும், அவர்கள் பயணிகளைத் தாக்கும் அளவிற்குத் துணிந்துவிட்டதாகவும் பொதுமக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
