விஜய் கட்சியில் இணையும் அதிமுக  அமைச்சர்கள்.. அப்செட்டில் தவெக பாய்ஸ்..! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ..? விஜய் ரசிகர்களின் குமுறல்…!!

By Swetha on வைகாசி 28, 2026

Spread the love

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு இடையே, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, அடுத்தடுத்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வருகின்றனர். குறிப்பாக, முன்னாள் எம்.எல்.ஏ-க்களான ஜெயக்குமார், சத்தியபாமா, மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா மற்றும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் தவெக-வில் இணைந்துள்ளனர். தங்களின் அரசியல் எதிர்காலத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இவர்களின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதிமுகவினர் தொடர்ந்து தவெக-வில் இணைவது, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மூத்த அரசியல்வாதிகள் உள்ளே வருவதால், அவர்கள் தங்களது ஆதரவாளர்களைக் கொண்டு வந்து கட்சிப் பொறுப்புகளைக் கைப்பற்ற முயல்வார்கள் என்றும், இதன் காரணமாகக் கட்சித் துவங்கியது முதல் விஜய்க்காக உழைத்த தங்களுக்கு வருங்காலத்தில் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ (வாய்ப்பு) கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சமும், ஏமாற்றமும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

   

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய்யின் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம் மற்றும் தவெக-விற்காக அர்ப்பணிப்புடன் உழைத்தவர்களுக்கு மட்டுமே கட்சியில் உரிய அங்கீகாரமும், முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று தவெக தொண்டர்கள் கட்சித் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாகவே மக்கள் தவெக-வை ஆதரித்து வாக்களித்த நிலையில், அதே பழைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து இணைந்தால் எப்படி உண்மையான அரசியல் மாற்றம் ஏற்படும் என்று விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.