லிபியாவின் முன்னாள் அதிபர் முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி (53), நேற்று மேற்கு லிபியாவில் உள்ள ஜின்டான் (Zintan) நகரில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். நான்கு பேர் கொண்ட முகமூடி அணிந்த ஆயுதக் கும்பல் அவரது இல்லத்திற்குள் புகுந்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை செயலிழக்கச் செய்த பின் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவரது அரசியல் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தனது இல்லத்தின் தோட்டத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட அவரை மருத்துவப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த காயங்களால் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளனர். 2011 புரட்சிக்குப் பிறகு பல ஆண்டுகள் சிறைவாசத்தில் இருந்து விடுதலையான அவர், மீண்டும் அரசியல் களத்தில் இறங்கி அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வந்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த லிபிய அரசு உத்தரவிட்டுள்ளது.
