குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேர்ந்த எதிர்பாராத தீவிபத்தில், ஒரு குழந்தை மற்றும் நான்கு பெண்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப் பிரதேசத்திலிருந்து புடவை மடிக்கும் பணிக்காக வந்த இவர்கள், மூன்று அடுக்கு மாடி வீட்டில் ஃபோம் தாள்களைக் கொண்டு பேக்கிங் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார ஸ்விடச் போர்டிலிருந்து உருவான மின்பொறி ஃபோம் தாள்களில் பட்டுத் தீப்பற்றியுள்ளது. தீப்பரவல் ஒருபுறம் இருக்க, அந்தத் தாள்கள் எரிந்தபோது வெளிவந்த நச்சுத்தன்மை கொண்ட ரசாயனப் புகை அவர்கள் அனைவரும் மயக்கமடையக் காரணமாகியுள்ளது.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைவாகச் செயல்பட்டு, வீட்டிற்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர். ஃபோம் தாள்கள் எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டவை என்பதால், தீப்பற்றிய வேகத்தில் ரசாயனப் புகை வீடு முழுவதும் பரவி அவர்களின் உயிரைப் பறித்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளது.
