தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகர் என்றால் அது சந்தேகமே இல்லாமல் தியாகராஜ பாகவதர்தான். மொத்தமே 14 படங்கள் மட்டுமே நடித்த அவர் அன்றைய தமிழக மக்களால் உச்சிமுகர்ந்து கொண்டாடப்பட்டார். அவர் நடித்ததில் 7 படங்கள் ப்ளாக்பஸ்டர் படங்கள்.
ஒரு கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற வந்த பின்னர் அவர் நடித்த படங்கள் தொடர்ந்து ப்ளாப் ஆகின. அப்போது சினிமாவிலும் மிகப்பெரிய மாற்றம் ஒன்று நடந்தது. அதை உள்வாங்காமல் தன்னுடைய பழைய ஸ்டைலிலேயே பாகவதர் நடித்தது ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. பின்னர் உடல்நலக் குறைவால் கண்பார்வையிழந்து அவர் இறந்தது எல்லாம் காவிய சோகம் நிறைந்த துயர நாடகம்.
புகழ்பெற்ற நாடக நடிகராக இருந்த தியாகராஜ பாகவதர் முதல் முதலாக நடித்த திரைப்படம் பவளக்கொடி. அவர் நடித்த ஹிட்டான நாடகத்தின் மறுவடிவம்தான். அதே போல அவரை சூப்பர் ஸ்டார் நடிகராக்கிய படம் அம்பிகாபதி. அந்த படத்தை அமெரிக்கரான எல்லிஸ் ஆர் டங்கன் இயக்கினார். உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகத்தைத் தழுவி உருவாக்கினர்.

#image_title
ரோமியோ ஜூலியட் ஒரு காதல் கதை என்பதால் அம்பிகாபதியில் தியாகராஜ பாகவதரும், கதாநாயகி சந்தானலட்சுமியும் தொட்டு நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகளை எல்லாம் படமாக்கினார் எல்லிஸ். இது ரசிகர்களுக்கு அதுவரை இல்லாத புது அனுபவத்தைக் கொடுத்தது. இதனால் படம் சூப்பர் ஹிட்டானது.
ஆனால் அதே நேரத்தில் எல்லீஸ் அமெரிக்கக் கலாச்சாரத்தை இந்தியாவில் திணிக்கப் பார்க்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தமிழ் சினிமாவின் படமாக்கும் முறையை மாற்றிய படங்களில் அம்பிகாபதி ஒன்றாக அமைந்தது. இந்த படத்தில்தான் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் ஸ்லைடில் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
