மெட்டா (Meta) நிறுவனத்தின் சமீபத்திய அதிரடி பணிநீக்க நடவடிக்கையில், கடுமையாக உழைத்த தனது சக ஊழியர் ஒருவர் வேலையை இழந்துள்ள விபரத்தை மற்றொரு ஊழியர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. கடுமையான காலக்கெடு (Deadline) கொண்ட ஒரு முக்கிய திட்டத்திற்காக, கடந்த சில மாதங்களாக அந்தப் பெண் ஊழியர் நாளொன்றுக்கு 4 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்கி, நள்ளிரவு மற்றும் அதிகாலை 3 மணி வரை அயராது உழைத்ததாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைநீக்க நடவடிக்கையில் இருந்து தான் தப்பித்துவிட்டாலும், நிறுவனத்திற்காகத் தனது ஆரோக்கியத்தையும் பொருட்படுத்தாமல் உழைத்த திறமையான சக ஊழியர் நீக்கப்பட்டிருப்பது தனக்கு பெரும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதாக அந்த ஊழியர் பதிவிட்டுள்ளார். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய, எந்தவொரு எச்சரிக்கையோ அல்லது குறைபாடோ இல்லாத சிறந்த தடம் கொண்ட ஒருவரை ஏன் மெட்டா நிர்வாகம் தேர்ந்தெடுத்தது என்று புரியவில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப மாற்றங்களின் காரணமாக மெட்டா நிறுவனம் உலகளவில் சுமார் 8,000 ஊழியர்களை அதிகாலை 4 மணிக்கு மின்னஞ்சல் அனுப்பி அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்தச் சூழலில், நிறுவனத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் கூட இவ்வாறு திடீரென நீக்கப்படுவது கார்ப்பரேட் நிறுவனங்களின் மனிதநேயமற்ற போக்கைக் காட்டுவதாக இணையவாசிகள் பலரும் தங்களது கண்டனங்களையும், பாதிக்கப்பட்ட ஊழியருக்கு ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
