சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதி சீட்டுடன் நீண்ட நேரம் காத்திருப்பவர்கள் மீது அபராதம் விதித்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை பிரிவினர் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புகர் மின்சார ரயில்களும், விரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. தினம்தோறும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் என மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தருகிறார்கள்.
அவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. சமீபகாலமாக வடமாநிலத்தை சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்டோரும் 60 வயதிற்கு மேற்பட்டோரும் ரயில்களில் சென்னைக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அவர்கள் வீடுகளுக்கு தெரியாமல் வந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு படையால் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டனர். அதில் 85 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரவு நேரங்களில் பயணிகளைத் தவிர பொதுமக்களும் தூங்குவதாக தகவல்கள் வந்துள்ளது. இவ்வாறு வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ரயில் நிலையத்திற்குள் ரயிலில் பயணிப்பவர்கள் மட்டுமே தங்கிக் கொள்ள அனுமதி உண்டு. எனவே நடைமேடை அனுமதிச்சீட்டை எடுத்து நீண்ட நேரம் தங்குவது விதியை மீறுவதாகும் என எச்சரித்துள்ளனர்.
