தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.
அதே சமயம் ஒவ்வொரு கட்சியினரும் மாற்றுக் கட்சியினரை சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் திமுக அரசுக்கான இறுதி கவுண்டவுன் தொடங்கி விட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், விவசாயிகள் தினமும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் அதைப் பற்றி எல்லாம் முதல்வர் ஸ்டாலின் கவலைப்படுவதில்லை.
விவசாயிகள் மீது அக்கறை இல்லாத திமுக ஆட்சி முடிவதற்கு இன்னும் 140 நாட்கள் மட்டுமே உள்ளது. அதற்கான கவுண்டவுன் தற்போது தொடங்கிவிட்டது. 140 நாட்களில் என்ன செய்யப் போகிறார்கள். ஒன்றுமே செய்ய முடியாது. அடுத்ததாக தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் ஆட்சி மாற்றம் வரும். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.
