சென்னை எழும்பூர் புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்த பெண் காவலர் சத்யா (28), எழும்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், தனியார் நிறுவன பொறியாளரான இவரது கணவர் விஜய்க்கும் (30) கடந்த 2024-ம் ஆண்டு திருமணமாகி, ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இருவரும் வேலைக்குச் சென்று வந்த நிலையில், குழந்தையைப் பராமரிப்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், கடந்த மாதம் 27-ஆம் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சத்யா, வீட்டின் அறையைப் பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். கணவர் விஜய் அவரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி சத்யா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், திருமணமான இரண்டு ஆண்டுகளிலேயே பெண் காவலர் உயிரிழந்துள்ளதால், இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த சென்னை காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
