இரண்டு மனைவிகள் மற்றும் 16 குழந்தைகளுடன் வசித்து வரும் நபர் ஒருவர், தமக்குக் குழந்தைகள் சுமை இல்லை என்றும் அவர்கள் எதிர்காலத்தின் பலம் என்றும் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ள கருத்துக்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. அந்த நபரிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, தனக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாகவும், இருவரையும் தான் உழைத்துக் காப்பாற்றுவதால் அவர்கள் தன்னுடனான வாழ்க்கையில் முற்றிலும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், தங்களை வெளியில் பார்க்கும் மக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்க்கிறார்களே தவிர, யாரும் தவறாக எதுவும் சொல்வதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து தன் பிள்ளைகளைப் பற்றிக் குறிப்பிட்ட அந்த நபர், ஒரு மனைவிக்கு 8 பிள்ளைகள் வீதம் தமக்கு மொத்தம் 16 குழந்தைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இவ்வளவு பெரிய குடும்பத்திற்கு அரசிடமிருந்து எந்தவித நிதியுதவியோ அல்லது சலுகைகளோ கிடைக்கவில்லை என்றாலும், அதைப் பற்றிக் கவலையில்லை என்றும், தாங்கள் மொத்தம் 18 பேர் உழைத்தால் மாதத்திற்கு 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை எளிதாகச் சம்பாதித்து நிர்வகிக்க முடியும் என்றும் அவர் மார்புதட்டியுள்ளார். இத்தனை குழந்தைகள் இருப்பது சுமையா என்ற கேள்விக்கு, “அதிகக் குழந்தைகள் இருந்தால் அதிக கைகள் என்று அர்த்தம், அவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் நிச்சயம் நமக்கு உதவிகரமாக இருப்பார்கள்” என்று அவர் தர்க்க ரீதியாகப் பதிலளித்துள்ளார்.
